கடற்படையிலும் ரபேல்; இறுதிக்கட்டத்தில் பேச்சுவார்த்தை; இன்று பிரான்ஸ் செல்கிறார் தோவல்!

புதுடில்லி: ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் குறித்து பேச்சு நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று பிரான்ஸ் செல்கிறார்.


பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.


இந்த நிலையில், 2 நாள் பயணமாக பிரான்ஸ் செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டு உயரதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது, ரபேல் விமானங்கள் விற்பனை குறித்த இறுதி அறிக்கையை பிரான்ஸ் சமர்ப்பிக்க உள்ளது. அதனை பரிசீலித்து இந்த நிதியாண்டுக்குள் இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இந்திய கடற்படையில் உள்ள ரஷ்யாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மிக் 29கே ரக விமானங்களுக்கு மாற்றாக புது விமானங்களை சேர்க்கும் வகையில் இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய கடற்படையிலும் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும்.


ஒரு இருக்கை கொண்ட 22 ரபேல் கடற்படை போர் விமானங்களும், இரு இருக்கை கொண்ட 4 பயிற்சி விமானங்களையும் கொள்முதல் செய்ய இந்தியா திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இந்த ஆண்டில் மட்டும் போர் விமானங்களை கொள்முதல் செய்வது இது 2வது முறையாகும்.

Advertisement