எதிர்பார்க்கும் மழை அளவு, ஏரி நீர் இருப்பு எல்லாம் தெரிஞ்சிருக்கணும்: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!

8

சென்னை: 'அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.


சென்னை தலைமை செயலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை இருந்தால் எந்த பாதிப்பையும் தடுத்து விடலாம். காலநிலை மாற்றத்தால் ஏற்படும், குறைந்த நேரத்தில் அதீத மழையை எதிர்கொள்வது முக்கியம்


TN ALERT செயலி




கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பை தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. காலநிலை மாற்றப் பாதிப்பை எதிர்கொள்வது அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் நம்மால் பாதிப்புகளை தடுக்க முடியும்.
வானிலை முன்னறிவிப்புகளை அறிந்து கொள்ள, தமிழக அரசு TN ALERT செயலியை உருவாக்கியுள்ளது. எதிர்பார்க்கப்படும் மழை அளவு, ஏரிகளின் நீர் இருப்பு, நிலவரத்தை அந்த செயலியின் மூலம் மக்கள் அறிய முடியும். ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்


வெள்ள தடுப்பு, மின்கம்பிகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்றினால் பேரிடர்களை தடுக்க முடியும்.
பருவமழை ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ள தடுப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து துரிதப்படுத்த வேண்டும்.



ஒற்றுமையாக செயல்படுங்கள்!




அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வெள்ளத்திற்கு முன்பாகவே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அரசுத்துறை ஒருமித்த கருத்தோடு, ஒற்றுமையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வெள்ளம் ஏற்பட்டதும் எவ்வளவு விரைவாக செயல்பட முடியுமோ அவ்வளவு விரைவாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement