எல்லாம் பயத்தின் வெளிப்பாடு தான்; கார்கேவுக்கு அமித் ஷா பதிலடி

புதுடில்லி: பிரதமர் மோடியை தோற்கடிக்கும் வரை சாக மாட்டேன் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.


ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திடீரென மயங்கி விழுந்தார். பின்னர், கட்சியினரின் உதவியுடன் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பிய அவர் பிரதமர் மோடிக்கு எதிராக ஆவேசமாக பேசினார். மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை சாக மாட்டேன் என்றும், மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்று சூளுரைத்தார்.


இதைத் தொடர்ந்து, அரசியல் வேறுபாடுகளையும், தன்னை விமர்சித்ததையும் மறந்து, கார்கேவை பிரதமர் மோடிதொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல்நலம் குறித்து விசாரித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டது.


இந்த நிலையில், கார்கேவின் இந்தப் பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடந்து கொண்ட விதம் அவரது கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிருப்தியடைந்துள்ளது.அவரது உடல்நலம் குறித்த விஷயத்தில் தேவையில்லாமல் பிரதமரை இழுத்து பேசியுள்ளார்.


இதன்மூலம் பிரதமர் மோடியின் மீது காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கும் வெறுப்பு மற்றும் பயம் தெரிகிறது. பிரதமரை அவர்கள் தொடர்ந்து நினைத்து கொண்டிருக்கிறார்கள். கார்கே நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ, பிரதமர் மோடியும், நானும், நம் கட்சியினரும் பிரார்த்திக்கிறோம். பல்லாண்டு காலம் அவர் வாழ வேண்டும். 2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை அவர் பார்க்க பார்க்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement