சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியை கைது

கோவை: அன்னுாரில் பள்ளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியை, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை உடையம்பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்யா, 32; திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக, அன்னுாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பள்ளியில் ஒன்பதாவது படிக்கும் சிறுமி ஒருவரிடம் ஆசிரியை பாசமாக பழகினார். கடந்த, 28ம் தேதி இரவு, சிறுமியை வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஆசிரியை அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவங்கள் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அன்னுார் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஆசிரியை சவுந்தர்யாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கு முன் பணியாற்றிய இரண்டு பள்ளிகளில், இதே போல் மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அவர் மீது புகார் எழுந்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Advertisement