கடலில் தத்தளித்த படகை மீட்கும் முயற்சி தோல்வி

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், இரவிபுத்தன்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த அருளப்பனுக்கு சொந்தமான விசைப்படகில், 12 பேர் கொச்சி மீன்பிடி துறைமுகத்திலிருந்து செப்., 11-ல் மீன்பிடிக்க சென்றனர். மேற்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் விசைப்படகு சென்று கொண்டிருந்த போது, இயந்திர கோளாறு ஏற்பட்டது. கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றுமாறு, உறவினர்கள் கன்னியாகுமரி கலெக்டர் மற்றும் முதல்வருக்கு மனு அளித்தனர்.

படகின் இயந்திர பழுதை சரி செய்யவும், மீனவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கவும் அப்பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்களுக்கு, இந்திய கடலோர காவல் படையால் தகவல் தெரிவிக்கப்பட்டு, உதவிகள் வழங்கப்பட்டன. எனினும், இயந்திர கோளாறு சரி செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது .

இதை தொடர்ந்து, கடலோர காவல் படை ஏற்பாட்டில், 'கைலா பார்ச்சூன்' என்ற சரக்கு கப்பல் மூலம், 12 மீனவர்களும் அழைத்து வரப்படுகின்றனர். இவர்கள் இன்று கொச்சி துறைமுகம் வந்து, அங்கிருந்து கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட உள்ளனர். அவர்கள் பயணித்த படகு என்னவானது என்பதும் இன்று தான் தெரிய வரும்.

Advertisement