ஜம்மு காஷ்மீரில் 40 தொகுதிகளில் இறுதிக்கட்ட தேர்தல்; காலை 9 மணி நிலவரம் 11.6% ஓட்டுப்பதிவு

1

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 40 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் துவங்கி நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, 11.6% ஓட்டுப்பதிவாகி உள்ளது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.



ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 18ம் தேதி, முதல் கட்டமாக, 18 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 63.38% ஓட்டுக்கள் பதிவாகின. செப்டம்பர் 26ம் தேதி, 2ம் கட்டமாக 25 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 57.31% ஓட்டுக்கள் பதிவாகின.


இந்நிலையில், இன்று (அக்டோபர் 01) 3வது கட்ட தேர்தல், 40 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் துவங்கி நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, 11.6% ஓட்டுப்பதிவாகி உள்ளது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 40 தொகுதிகளில் 5,060 வாக்கு மையங்கள் உள்ள நிலையில், 30 லட்சம் பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். 415 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் எல்லை அருகே 29 வாக்கு மையங்கள் உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



பிரதமர் வேண்டுகோள்!




சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ' ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் இன்று மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. ஜனநாயகக் கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்த வாக்காளர்கள் அனைவரும் முன் வந்து ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


முதன்முறையாக ஓட்டளிக்கப் போகும் இளைஞர்களைத் தவிர, ஓட்டளிப்பதில் பெண் சக்திகளின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement