சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி மறியல்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே வீராணம்பட்டியைச் சேர்ந்தவர், சின்ராஜ், 47; விவசாயி. இவருக்கு, மனைவி மற்றும் 14 வயது மகள் உள்ளனர்.

அந்த சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். அவரது உறவினர் முருகேசன், 21, என்பவர் சிறுமியை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த சிறுமியின் தந்தை சின்ராஜ், முருகேசனை கண்டித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அதற்காக, நேற்று முன்தினம் இரவு அப்பகுதியைச் சேர்ந்த சிறுவனிடம் விவசாயியை அழைத்து வருமாறு கூறியதாக தெரிகிறது. வந்த விவசாயியை, முருகேசன் கத்தியால் குத்திக் கொன்றார். பனையப்பட்டி போலீசார், முருகேசனை கைது செய்தனர்.

இதற்கிடையே, கொலையில் சிறுவனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி சின்ராஜ் உறவினர்கள், புதுக்கோட்டை- - பொன்னமராவதி - பனையப்பட்டி பகுதியில் நேற்று சாலை மறியல் செய்தனர்.

போலீசார் பேச்சு நடத்தி, சிறுவனுக்கு தொடர்பு இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாக தெரிவித்தனர்.

இதையடுத்து, போராடியவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement