ஏ.டி.எம்., கொள்ளையனின் வலது கால் அகற்றம்

கோவை: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், மூன்று ஏ.டி.எம்.,களை உடைத்து கொள்ளையடித்த, வட மாநில கும்பலை, நாமக்கல் மாவட்டத்தில், தமிழக போலீசார் சுற்றி வளைத்தனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஆசர் அலி, 30, என்பவரின் இரண்டு கால்களிலும், குண்டு பாய்ந்து காயங்கள் ஏற்பட்டன. அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இடது காலில் மாவு கட்டும், வலது காலில் அறுவை சிகிச்சை கட்டும் போட்டு, வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் நேற்று அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது வலது கால் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததையும், அப்படியே விட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் அறிந்தனர்.

இதையடுத்து, ஆசர் அலியின் வலது காலை, டாக்டர்கள் நேற்று, அறுவை சிகிச்சை செய்து கால், மூட்டிற்கு மேல் பகுதியில் இருந்து, வெட்டி அகற்றினர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கான அறுவை சிகிச்சை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது.

Advertisement