தொழிலாளியை குத்திக்கொன்ற மேஸ்திரி கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, மாப்பிள்ளைக்குப்பம் கிராமத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் சார்பில், திருமண மண்டபம் கட்டப்படுகிறது.

இதற்கான கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இங்கு, மதுரை மாவட்டம், கொக்குலம் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் மகன் கிருபாகரன்,38, என்பவர் கம்பி கட்டுபவராக பணிபுரிந்து வந்தார்.

அதே ஊரைச் சேர்ந்த ரவி மகன் நிவாஸ்,35, கம்பி பிட்டர் மேஸ்திரியாக பணிபுரிகிறார். இந்நிலையில், கிருபாகரனிடம், கடன் வாங்கிய நிவாஸ், பணத்தை திருப்பித் தரவில்லை.

இது தொடர்பாக,நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருவரும், குடிபோதையில் இருந்த நிலையில், அன்று இரவு, 9:45 மணிக்கு, மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரம் அடைந்த நிவாஸ், கம்பி கட்டும் குத்துாசியால், கிருபாகரனின் மார்பில் குத்தினார்.

படுகாயம் அடைந்த கிருபாகரனை, அக்கம் பக்கத்தினர், நன்னிலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். நன்னிலம் போலீசார் நிவாஸை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement