மாஜி அமைச்சர் கார் விபத்து வழக்கு; லாரி டிரைவருக்கு ஓராண்டு சிறை

பெரம்பலுார் : திருச்சி மாவட்டம், சங்கிலியாண்டபுரம் நல்லமுகமது மகன் மரியம்பிச்சை. 2011ல் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார்.

இவர், அமைச்சராக பொறுப்பேற்ற 8வது நாளில், சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, 2011 மே 23ம் தேதி, 'இனோவா' காரில் முன்சீட்டில் அமர்ந்து, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சிகிச்சை



அந்த காரை சென்னை, முகப்பேர் மேற்கு வெள்ளாளத்தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஆனந்தன், 27, என்பவர் ஓட்டிச்சென்றார். கார், காலை 9:00 மணிக்கு பெரம்பலுார் மாவட்டம், திருவிளக்குறிச்சி பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது, கன்டெய்னர் லாரியை முந்த முயன்றபோது அந்த லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த அமைச்சர் மரியம்பிச்சை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதில் காரில் வந்த வெங்கடேஷ், மாதேஸ்வரன், கார்த்திகேயன் மற்றும் கார் டிரைவர் ஆனந்தன் படுகாயமடைந்தனர்.

அபராதம்



இது குறித்த புகாரில் பாடாலுார் போலீசார் விசாரணை செய்தனர். அமைச்சரின் கார் டிரைவர் ஆனந்தன் மற்றும் கன்டெய்னர் லாரி டிரைவர் ஆந்திராவை சேர்ந்த நியமத்துல்லா ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.

கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி, அரசு உத்தரவின்படி இந்த வழக்கு திருச்சி சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு பெரம்பலுார் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ஆனந்தனுக்கு ஓராண்டு மற்றும் 4 மாத சிறை தண்டனை மற்றும் 3,500 ரூபாய் அபராதமும், கன்டெய்னர் லாரி டிரைவர் நியமித்துல்லாவிற்கு ஓராண்டு மற்றும் 4 மாத சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement