தாய்லாந்தில் பஸ் டயர் வெடித்து தீ விபத்து; 25 மாணவர்கள் பலியான சோகம்!

1

பாங்காங்: தாய்லாந்தில் மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ்சில் டயர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 25 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


தாய்லாந்தில், மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பாங்காக் நோக்கி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 44 பேர் பஸ்சில் சுற்றுலா சென்றனர். அப்போது பஸ்சில் திடீரென டயர் வெடித்ததில், தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயில் கருகி, 25 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் பலத்த காயமுற்றனர்.


தீ பற்றியதும் சுதாரித்து கொண்ட, 3 ஆசிரியர்கள் உட்பட சில மாணவர்கள் பஸ்சில் இருந்து வெளியேறியனர். இதனால் அவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும், சிலரை காணவில்லை அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது.


உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீ விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவில்லை. ஆனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிரதமர் இரங்கல்




'உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறேன்' என தாய்லாந்தின் பிரதமர் பேட்டோங்டர்ன் ஷினவத்ரா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.நெடுஞ்சாலையில் பஸ் டயர் வெடித்து, தடுப்பு சுவரில் மோதி, தீ பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Advertisement