மதுவிலக்கு கொண்டு வாங்க; முடியலையா, கிளம்புங்க: முதல்வருக்கு சொல்கிறார் அன்புமணி

10

சென்னை: 'மது விலக்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. மதுவிலக்கை அமல்படுத்துவதில் தோல்வியை ஒப்புக்கொண்டு தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது; நாடு முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்பட்டால் மட்டும் தான் மதுவிலக்கு சாத்தியமாகும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். மதுவுக்கு ஆதரவான சட்ட அமைச்சர் ரகுபதியின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.


மதுவிலக்கு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குடிகாரர்களை விட அதிக தள்ளாட்டத்தில் உள்ளது. 2021ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் டில்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


முதல்வர் யார்?




இப்போது அதற்கு முற்றிலும் எதிராக அமைச்சர் ரகுபதி பேசுகிறார். அப்படியானால், தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலினா, ரகுபதியா? தேசிய அளவில் மதுவிலக்கு என்பதே போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல் தான்.
அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முழங்கும் தி.மு.க., மக்கள் நலனுக்காக மதுவிலக்கு கேட்டால் மத்திய அரசை கேளுங்கள் என்பதும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் மத்திய அரசை கேளுங்கள் என்பதும் மக்களை முட்டாள்களாக நினைத்து ஏமாற்றும் செயல். மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது கூட சாத்தியமற்றது என்று அமைச்சர் ரகுபதி கூறுகிறார்.


கள்ளச் சாராயம்




தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், கள்ளச் சாராயம் பெருகி விடும்; அத்தகைய நிலை உருவானால் மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதிலாக கள்ளச் சாராய ஒழிப்பில் மட்டும் தான் அரசு கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று அமைச்சர் ரகுபதி கூறுகிறார்.
தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டால் கள்ளச் சாராயம் பெருகாதா? அப்போது கள்ளச் சாராயத்தை தடுப்பது உள்ளிட்ட மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசிடம் திராவிட மாடல் அரசு தாரை வார்த்து விடுமா?


போலி சாக்குகள்




அண்டை மாநிலத்தில் மது விற்பனை செய்யப்படும் போது தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்பதெல்லாம் நகைச்சுவையான போலி சாக்குகள். தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது, கள்ளச் சாராயத்தை தடுப்பது, அரசின் வருவாய் குறையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்தும் சாத்தியம் தான்.
திராவிட மாடல் அரசுக்கு மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக் கொண்டு பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement