பாராசூட்டில் சாகசம்
சென்னையில் வருகின்ற 6 ஆம் தேதி நடக்கப்போகும் வான் சாகசம் நிகழ்ச்சியைக்காணும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது,அதற்கு காரணம் இரு முறை நடந்த ஒத்திகை நிகழ்வுகள்தான்.
இரண்டாவது ஒத்திகை நிகழ்வு கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது.இந்த ஒத்திகையின் போது பாராசூட்டில் குதிப்பது புதிதாக நடந்தது.
ஒரு புள்ளியைப் போல தெரிந்த பாராசூட் நெருங்க நெருங்க அது ஒன்றல்ல ஐந்து என்பது தெரிந்தது, அந்த ஐந்து வீரர்களில் மூன்று பேர் நமது தேசிய கொடியின் வண்ணம் கொண்ட மூன்று பாராசூட்டுகளை ஒன்றாக இணைத்தபடி வந்தனர்,தரைக்கு சில அடி துாரம் இருக்கும் போது சட்டென தனித்தனியாக பிரிந்து தரையிறங்கி பார்வையாளர்களின் கைதட்டலைப் பெற்றனர்.
1947ஆம் ஆண்டிலேயே வானத்தை அளந்த நமது விமானப்படைப் பிரிவின் சிறிய ரக விமானம் இப்பவும் நான்தான் 'கிங்' என்பது போல தரைக்கு வெகு பக்கத்தில் பறந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
நிகழ்ச்சி 6 ஆம் தேதிதான் என்றாலும் விமானப்படை வீரர்கள் அவர்தம் குடும்பத்தினர் கடற்கரையை ஒட்டியுள்ள மக்கள் என பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.
கடுமையான வெயில் காரணமாக விமானங்கள் வானத்தில் இதய வடிவில் வெளிப்படுத்திய புகை சரிவர வானத்தில் படரவில்லை, அதே போல மூவர்ண கொடியின் நிறமும் பிடிபடவில்லை.
இரண்டு மணி நேரம் லைட்ஹவுஸ் பக்கம் இருந்தும், துறைமுகத்தின் பக்கம் இருந்தும், விவேகானந்தர் மண்டபம் பக்கம் இருந்தும், மாறி மாறி விமானங்களும்,ஹெலிகாப்டர்களும் பறந்து பாய்ந்து வந்து சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை மகிழ்வித்தன.
6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அன்று நடக்கும் வான் சாகசத்தைக்காண வரலாறு காணாத கூட்டத்தை சென்னை மெரினா கடற்கரை சந்திக்கப்போவது மட்டும் நிச்சயம்.
-எல்.முருகராஜ்