ஏமாத்துறதுல பி.எச்டி., படிச்சிருப்பாங்களோ; போலியாக வங்கி நடத்தி மோசடி செய்த கும்பல்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் எஸ்.பி.ஐ., பெயரில் போலியாக வங்கி நடத்தி , ஏழைகளிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
நாட்டில் ஏதோ ஒரு வகையில் மோசடி நடந்து வருகிறது. ஏ.டி.எம்., கார்டு தகவல்களை பெற்று பணம் திருடுதல், லிங்க் ஒன்றை அனுப்பி அதன் மூலம் தகவல்கள் திருடுதல் , போலியாக ஆவணங்களை கொடுத்து பணம் வாங்கி மோசடி என நடந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இதையெல்லாம் மிஞ்சும் வகையில் சத்தீஸ்கரில் நடந்த மோசடி பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. அதுவும் நாட்டின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ., -ன் பெயரை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக வெளியான தகவல் பின்வருமாறு: சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் 250 கி.மீ., தொலைவில் உள்ளது சபோரா கிராமம். இங்கு மர்ம நபர்கள் சிலர், கட்டடம் ஒன்றை, 7 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து எஸ்.பி.ஐ., கிளை என பெயர் பலகை வைத்து உள்ளனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக உண்மையான வங்கி போல், மேஜை, நாற்காலிகள், கண்ணாடி கூண்டுகள் வாங்கி வைத்துள்ளனர். அதில் பணி அமர்த்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்டனர்.
இதற்காக ஏழைகள், வேலை இல்லாதவர்களை குறிவைத்து ரூ.30 ஆயிரம் சம்பளம் என ஆசை காட்டி உள்ளனர். அவர்களிடம் லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கான உத்தரவை வழங்கி உள்ளனர். அதில் சந்தேகம் வராதவகையில், உண்மையான எஸ்.பி.ஐ., வங்கி வழங்கும் உத்தரவை போல் கொடுத்துள்ளனர். அரசு வேலை எனக்கருதி, பலர் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பணம் கொடுத்து உள்ளனர்.
போலி வங்கி மீது சந்தேகம் வராத அப்பகுதி மக்கள் வரவு, செலவு வைக்க துவங்கி உள்ளனர். இந்த போலி வங்கி அமைந்துள்ள நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள தாப்ரா நகரில் செயல்படும் எஸ்.பி.ஐ., கிளையில் கணக்கு வைத்துள்ளவருக்கு போலி வங்கி மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அங்கு சென்று விசாரித்துள்ளார். ஊழியர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை. இதனால், இந்த கிளை குறித்து தனது கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளரிடம் தகவல் கொடுத்துள்ளார். அவர்கள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
போலீசாரும், எஸ்.பி.ஐ., அதிகாரிகளும் இங்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால், அதற்குள் மோசடியாளர்கள் பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர். அவர்களில் 4 பேரை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் நிதி இழப்பு ஏற்பட்டதுடன், சட்டச்சிக்கலையும் எதிர்கொண்டு உள்ளனர். இதனால், அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகின்றனர்.