வாழ்க்கை ஒரு வட்டம்; கட்சி விட்டு கட்சி தாவி நிரூபித்தார் முன்னாள் எம்.பி.,

2

சண்டிகர்: ஹரியானாவை சேர்ந்த முன்னாள் எம்.பி., ஒருவர் பா.ஜ.,வுக்கு ஓட்டுக் கேட்ட இரண்டு மணி நேரத்தில் காங்கிரசில் இணைந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.


ஹரியானாவை சேர்ந்தவர் அசோக் தன்வர். 2009ல் காங்கிரஸ் சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். பல கட்சிகளுக்கு சென்று வந்தவர். 2019 ல் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய அவர், 2021ல் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும், 2022ல் ஆம் ஆத்மியிலும் இணைந்தார். பிறகு அங்கு மனக்கசப்பு ஏற்படவே, அக்கட்சியில் இருந்து விலகி இந்த ஆண்டு பிரதமர் மோடியை புகழ்ந்து பா.ஜ.,வில் இணைந்து பணியாற்றி வந்தார். ஹரியானா மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஜிந்த் மாவட்டத்தில் இன்று பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு ஓட்டு சேகரித்தார்.

இது முடிந்த இரண்டு மணி நேரத்தில், நூவ் மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்த மேடைக்கு அசோக் தன்வர் வந்தார். அங்கு ராகுல் முன்னிலையில், தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்து பா.ஜ., தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

Advertisement