துாப்புல் வேதாந்த தேசிகர்  சூரிய பிரபையில் உலா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 756வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மஹோத்ஸவம் நேற்று முன்தினம் துவங்கியது.

தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும் உற்வசத்தில் தினமும், காலையில் தங்க பல்லக்கில் வெவ்வேறு அலங்காரத்திலும், மாலையில், பல்வேறு வாகனத்திலும், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் துாப்புல் வேதாந்த தேசிகர், முக்கிய வீதி வழியாக உலா வருகிறார்.

அதன்படி, இரண்டாம் நாள் உற்சவமான நேற்று காலை தங்கப்பல்லக்கு, அம்மாள் காலேக்ஷபப கோஷ்டி நடந்தது. மாலை சூரிய பிரபையில் எழுந்தருளிய வேதாந்த தேசிகர் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். நாளை காலை, தங்கப்பல்லக்கில் பரவாசுதேவன் அலங்காரத்திலும், இரவு ஹம்ஸ வாகனத்திலும், துாப்புல் வேதாந்த தேசிகர் உலா வருகிறார்.

ஏழாம் நாள் உற்சவமான வரும் 9ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ராமர் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அக்., 12ம் தேதி விளக்கொளி பெருமாள் மங்களாசாஸனமும், தேவாதிராஜன் பெரிய தங்க பல்லக்கில் பேரருளாளன் மங்களாசாஸனத்திற்கு அஞ்சலி திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். அக்., 13ம் தேதி காலை, கந்தப்பொடி வசந்தம், தீபப்ரகாசருக்கு விமான உற்சவத்துடன், 11 நாட்கள் நடக்கும் துாப்புல் வேதாந்த தேசிகரின் வார்ஷீக மஹோத்ஸவம் நிறைவு பெறுகிறது.

Advertisement