பிராமணர் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோட்டைக்கு பேரணி
கோவை: பிராமணர் சமூகத்தை பாதுகாக்க, மத்திய - மாநில அரசுகள் புதிய சட்டம் இயற்றக்கோரி, சென்னையில், வள்ளுவர் கோட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை, நவ., 3ல்் பேரணி நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக, ஹிந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலர் டி.குருமூர்த்தி கூறியதாவது:
தமிழகத்தில் மற்ற சமுதாயத்தினருக்கு அளிப்பதுபோல, பிராமணர் சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை; இட ஒதுக்கீடும் கிடையாது. வேலைவாய்ப்பிலும் முன்னுரிமையோ, சலுகையோ வழங்குவதில்லை.
பாடசாலை மற்றும் கோவில்களில் பணிபுரியும் குருக்களை கிண்டல் செய்து வந்தவர்கள், தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலாவை விமர்சிக்கும் அளவுக்கு, தரம் தாழ்ந்து விட்டனர்.
திராவிட கொள்கையை புகுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, பிராமணர் சமுதாயத்தை இழிவுபடுத்தி வருகின்றனர்.
பிற சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசினால், உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் உள்ளது. சிறுபான்மை சமூகமான பிராமணர்களை இழிவுபடுத்தி பேசுபவர்களை தண்டிப்பதற்கு, இதுவரை சட்டமில்லை.
அச்சமூகத்தை பாதுகாக்கும் வகையிலும், அவர்களை இழிவுபடுத்தி பேசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையிலும், மத்திய - மாநில அரசுகள் புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து சமுதாய தலைவர்களின் ஆதரவோடு, சென்னையில் வள்ளுவர் கோட்டம் முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை, ஒரு லட்சம் பிராமணர்களை ஒன்று திரட்டி, நவ., 3ல் கோரிக்கை பேரணி நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒருங்கிணைப்பு பணியை, குருமூர்த்தி செய்கிறார். இவரை தொடர்பு கொள்ள: 98947 76577.