மாவட்ட வருவாய் அலுவலர் என பண மோசடி: ஏட்டு, பெண் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன், போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் முருகராஜ், 41, தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதுாரைச் சேர்ந்தவர். இவருக்கும் ஓசூரைச் சேர்ந்த வளர்மதி, 42 என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது.

வளர்மதி, திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் என கூறி பலரிடமும் மோசடி செய்தார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு நிலப்பட்டா வாங்கி தருவதாக கூறி, 10 லட்சம் ரூபாய் பெற்றார்.

பட்டா வாங்கித் தரவில்லை பணமும் திரும்ப தராததால் சசிகுமார், முருகராஜிடம் கேட்டார். முருகராஜ் காசோலை கொடுத்தார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது.

எனவே, முருகராஜிடம் சசிக்குமார் பணம் கேட்டார். பணம் தராததால், திருநெல்வேலி ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன்படி, முருகராஜ், வளர்மதி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும், பலரிடம் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement