200 மாணவர் அறைகளில் போலீஸ் அதிகாலை சோதனை

கோவில்பாளையம்: கோவை புறநகரில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியானது.

கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவின்பேரில், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்கராமன் தலைமையில் ஐந்து குழுக்களாக, குரும்பபாளையம் அருகே வையாபுரி நகர், பண்ணாரி அம்மன் நகர் மற்றும் வசந்தம் நகரில், கல்லுாரி மாணவர்கள் தங்கியுள்ள 200 அறைகளில், நேற்று காலை 5:45 மணிக்கு திடீர் சோதனை நடத்தப்பட்டது.

என்ன, ஏது என மாணவர்கள் உணரும் முன், போலீசார் அதிரடியாக அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர்.

இன்ஸ்பெக்டர்கள் செல்வி, சுமதி, மாதையன் மற்றும் 10 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 50 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

நம்பர் பிளேட் இல்லாத நான்கு பைக்குகள், இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகனங்களின் ஆவணங்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

போதை பொருட்கள் எதுவும் பிடிபடவில்லை.

எனினும், 'போதை பொருள் பயன்படுத்துவோர், கடத்துவோர், குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும்' என, மாணவர்களுக்கு போலீசார் அறிவுறுத்திச் சென்றனர்.

Advertisement