குமரி பகவதி அம்மன் கோவில் நிலத்தை மீட்க வழக்கு

மதுரை: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்கக்கோரி தாக்கலான வழக்கில் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாறு சிவசிங் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம், ஒரு மருத்துவமனை அருகே உள்ளது. அதை சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். நிலத்திற்கு மோசடியாக பத்திரப் பதிவு செய்துள்ளனர். இவர்களின் பெயர்கள் கூட்டுப் பட்டா, வருவாய் துறையின் இதர ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.

கோவிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய, ஏலம் விட இயலாது. அந்த நிலத்தை கோவில் பெயரில் பட்டா மாறுதல் செய்யக் கோரி அறநிலையத் துறை சுசீந்திரம் இணை கமிஷனர், நாகர்கோவில் ஆர்.டி.ஓ.,விற்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி முகமது ஷபீக்,''ஆர்.டி.ஓ., விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என தீர்ப்பு வழங்கினார்.

Advertisement