காசா போர் துவங்கி ஓராண்டு நிறைவு : வெற்றி உறுதி என்கிறார் இஸ்ரேல் பிரதமர்
டெல் அவிவ்: காசா போர் துவங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் 40 ஆயிரம் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
கடந்த ஆண்டு அக்., 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். அந்நாட்டிற்குள்ளும் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். அதில் 1,205 பேர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் அப்பாவிகள். உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 380 பேர் ராணுவ வீரர்கள். மேலும் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இன்னும் 100 பேர் அவர்களின் பிடியில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை துவக்கியது. அது முதல் ஹமாஸ் அமைப்பினரின் 40 ஆயிரம் இலக்குகள் மீது குண்டு வீசி உள்ளது. 4,700 சுரங்கப்பாதைகளை கண்டறிந்ததுடன், ஆயிரகணக்கான ராக்கெட் ஏவுதளங்களை அழித்துள்ளது. இந்த மோதலில் 346 வீரர்கள் உயிரிழந்தனர். 4,576 பேர் காயமடைந்தனர்.
அதேநேரத்தில், காசாவில் 41, ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ராக்கெட் வீச்சு
இந்த மோதலுக்கு பிறகு, இஸ்ரேல் மீது 13,200 ராக்கெட்கள் காசாவில் இருந்து வீசப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து 12,400ம், சிரியாவில் இருந்து 60, ஏமனில் இருந்து 180, ஈரானில் இருந்து 400 ராக்கெட்கள் இஸ்ரேலுக்குள் ஏவப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதலில் பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் 800 பேர் உயிரிழந்துள்ளனர். 4,900 இலக்குகள் மீது குண்டு வீசியதுடன். மேற்கு கரை மற்றும் ஜோர்டான் எல்லையில் சந்தேகத்திற்கிடமான வகையில் 5 ஆயிரம் பேரை கைது செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான், ஹிஸ்புல்லா, ஹவுதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு ஈரான் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவையும் தாக்குதல் நடத்தி கொன்றது.
அஞ்சலி
ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், இஸ்ரேலில் டெல் அவிவ், டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு இரங்கல் நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் கூடிய ஆயிரகணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். அங்கு இறந்தவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தது.
பாராட்டு
இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் அதில் ஈடுபட்டவர்களுக்கும் ஹமாஸ் அமைப்பு தலைவர் பாராட்டு தெரிவித்து உள்ளார். இந்த தாக்குதல் இஸ்ரேல் மீதான மாயபிம்பத்தை தகர்த்து எறிந்தது எனக்கூறியுள்ளது.
நெதன்யாஹூ பாராட்டு
இதனிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹமாஸ் தாக்குதலுக்கு பின், கள நிலவரத்தை இஸ்ரேல் ராணுவம் முற்றிலும் மாற்றி அமைத்து உள்ளது. இந்த போரில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் எனக்கூறியுள்ளார்.