நடத்தையில் சந்தேகம்; மனைவியை கொலை செய்து வீட்டு வளாகத்தில் புதைத்த கணவர்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் மனைவியை நிர்வாணமாக்கி கொலை செய்து வீட்டு வளாகத்தில் புதைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் ஏரகாடு கிராத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தர்மராஜ் 40. இவரது மனைவி தனலட்சுமி 36. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த தர்மராஜ் அடிக்கடி தனலட்சுமியுடன் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பூமிவேல் என்பவருக்கும் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்து 2018ல் பூமிவேலை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 2020ல் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

மகள்களின் நலன் கருதி உறவினர்கள் சமரசத்தால் தர்மராஜ், தனலட்சுமி மீண்டும் 7 மாதங்களுக்கு முன்பு சேர்ந்து வாழ்ந்தனர். இருப்பினும் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த தர்மராஜ் நேற்று மதியம் வீட்டில் இருந்த தனலட்சுமியுடன் தகராறு செய்தார். ஆத்திரத்தில் அவரை நிர்வாணமாக்கி சுத்தியலால் தலையில் தாக்கினார். ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி மயங்கி விழுந்தார். இச்சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்கள் கேட்டதற்கு ஒன்றுமில்லை என தர்மராஜ் கூறியுள்ளார். தனலட்சுமி உயிரிழந்ததை அறிந்த தர்மராஜ் மூடி மறைக்க வீட்டு வளாகத்திற்குள் குழி தோண்டி உடலை புதைத்து தண்ணீர் தெளித்து தடயங்களை மறைத்தார்.

தனலட்சுமியை உறவினர்கள் தேடிய போது அவர் காணாமல் போனது தெரிந்தது. ராமேஸ்வரம் போலீசில் புகார் அளித்தனர். தர்மராஜை போலீசார் கைது செய்து விசாரித்த போது மனைவியை கொலை செய்து வீட்டு வளாகத்தில் புதைத்ததை ஒப்புக்கொண்டார்.

தாசில்தார் செல்லப்பா முன்னிலையில் தனலட்சுமி உடலை தோண்டி எடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.

Advertisement