பரமக்குடி மாணவி பலாத்கார வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் கோர்ட்டுக்கு மாற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஒன்பதா-ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், பரமக்குடி நகராட்சி கவுன்சிலரும், அ.தி.மு.க., முன்னாள் நகர் அவைத் தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜா முகமது மற்றும் புரோக்கர்கள் அன்னலட்சுமி உமா, கயல்விழியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சிகாமணிக்கு, ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

இதை ரத்து செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி., போலீசார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்ற நீதிபதி இளங்கோவன், ஜாமினை ரத்து செய்தார்.

இதை எதிர்த்து, சிகாமணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் அன்னலட்சுமி உமா, கயல்விழி, ராஜா முகமது, புதுமலர் பிரபாகருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது.

உச்ச நீதிமன்றத்தில் சிகாமணி மேல்முறையீட்டு வழக்கு, செப்., 26ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் ரவிகுமார், சஞ்சய் கரோல் அமர்வு விசாரித்தது. 'உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமினை ரத்து செய்தது சரி தான். மூன்று வாரங்களுக்குள் சிகாமணி, ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.

வழக்கு, ராமநாதபுரம் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும்; ஐந்து மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிகாமணி உட்பட ஐந்து பேரும் ஆஜராகினர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத், ''வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது. இரு வாரங்களில் ஆவணங்கள் அனைத்தும் அங்கு மாற்றப்படும். அனைவரும் அக்., 25ல் ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

Advertisement