ஆந்திராவில் பலியான போலீஸ்காரர்; அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

இடைப்பாடி: ஆந்திராவில் மின்சாரம் பாய்ந்து பலியான போலீஸ்காரர் உடல், அவரது சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவூர் அருகே சுண்ணாம்புக்கரட்டூரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 54. கடந்த, 1992ல் மத்திய பாதுகாப்பு படை போலீசில் சேர்ந்தார். சமீபத்தில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மின் வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் ஐதராபாத், அங்கிருந்து கோவை கொண்டுவரப்பட்டது.

பின் அங்கிருந்து கோவை, வெள்ளலுார் மத்திய ஆயுதப்படை போலீஸ் டி.எஸ்.பி., கேசவன் உள்ளிட்ட போலீசார், தேவூர் அருகே சுண்ணாம்புக்கரட்டூரில் உள்ள வீட்டுக்கு வாகனம் மூலம் உடலை கொண்டு வந்தனர். அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக அரசு சார்பில் சங்ககிரி தாசில்தார் வாசுகி, சங்ககிரி கோட்ட கலால் தாசில்தார் வள்ளமுனியப்பன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் குடும்பத்தினர், உறவினர்கள், ஊர்மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மத்திய ஆயுதப்படை போலீசார், 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த திருநாவுக்கரசுக்கு மனைவி அனிதா, 45, மகள்கள் நவீனா, 22, சுனிதா, 19, உள்ளனர்.

Advertisement