ஏரியில் மூழ்கி இறந்த தொழிலாளி உடல் மீட்பு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மது போதையில் பைக்குடன் ஏரியில் மூழ்கி இறந்த கூலி தொழிலாளியின் உடலை போலீசார் மீட்டனர்.

உளுந்துார்பேட்டை நகராட்சி, கீரிமாத்தமன் கோவில் அருகே உள்ள ஏரியில் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று உளுந்துார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், உளுந்துார்பேட்டை நகராட்சி, காயிதேமில்லத் தெரு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், 41, என தெரியவந்தது.

கூலி தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் மதுபோதையில் இருந்ததாகவும், போதையில் பைக்குடன் ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். ஏரியில் மூழ்கி கிடந்த ஸ்பிளண்டர் பைக்கை போலீசார் மீட்டனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement