'அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்படும்'
திருச்சி: திருச்சியில், தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று கூறியதாவது:
ஒரு அரசு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக, தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன. மெரினாவில் நடந்த ஏர் ஷோவில் பங்கேற்ற மக்களுக்கு, குடிக்க தண்ணீர் வசதி கூட, இந்த அரசால் ஏற்படுத்தித் தரமுடியவில்லை. கார் ரேசில் கவனம் செலுத்திய உதயநிதி, துணை முதல்வரானபின் தன் பணிகளை மறந்து விட்டார்.
தமிழக போலீசார் இதுவரை, எந்த ஒரு தீவிரவாதியையும் கைது செய்யவில்லை, கஞ்சாவை தவிர வேறு எந்த போதைப் பொருளையும் பிடிக்கவில்லை. எல்லா வகையிலும் தோற்றுப் போயுள்ள தி.மு.க.,வை, 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் தோற்கடிப்பர்.
அரசின் கஜானாவை காலி செய்து, ஆசிரியர்களுக்கு சம்பளம் போடாத நிலையில் உள்ள தமிழக அரசு, மத்திய அரசின்மீது பழி போடுகிறது. இன்னும் மூன்று மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலைமை உருவாகும். ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்தால் தான், தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பர்.
சமூக நீதி வேண்டும் என்றால், தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.