ஓய்வின் போது பணப்பலன்கள் வழங்காத அரசு: சிவகாமி சாடல்

கள்ளக்குறிச்சி : 'தமிழகத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்காத திராவிட மாடல் ஆட்சி இல்லாமல் இருப்பதே மேல்' என, சிவகாமி ஐ.ஏ.எஸ்., கூறினார்.

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக எஸ்.சி., - எஸ்.டி., தொழிலாளர்கள் தொழிற்சங்க பேரவை சார்பில், ஊதிய ஒப்பந்த கோரிக்கை குறித்த வாயிற்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கவுரவ தலைவர் சிவகாமி, சங்க கொடியேற்றி, பெயர் பலகை திறந்து வைத்தார்.

பின், அவர், கூறியதாவது;

தமிழகத்தில் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. பழுதடைந்த பஸ்கள், பட்டியலின தொழிலாளர்களுக்கும், புதிய பஸ்கள் மாற்று சமூக தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.

அனைத்து அரசுத் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும்போது, அவர்களுக்கான பணப்பலன்கள் உடனடியாக வழங்கப்படுகிறது. ஆனால் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு, பல ஆண்டுகளாக நிலுவைத்தொகை வழங்கப்படாத அவலம் நீடித்து வருகிறது.

இதற்கு இதுவரை தீர்வு காணாத திராவிட மாடல் ஆட்சி இருந்து என்ன பயன். திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொள்ளும் இவர்களுடைய ஆட்சி இல்லாமல் இருப்பதே மேல்.

இவ்வாறு அவர், கூறினார்.

Advertisement