ஹரியானா தேர்தல் பற்றி காங்கிரஸ் புகார்: கார்கேவுக்கு ஆணையம் அழைப்பு

12

புதுடில்லி: ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில், அந்த கட்சியின் புகார் பற்றி பேசுவதற்கு நேரில் வரும்படி மல்லிகார்ஜூனே கார்கேவுக்கு, தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.



ஹரியானா சட்டசபை தேர்தலில் தொடர்ந்து மூன்றாம் முறையாக பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் வெல்லும் என்று தகவல்கள் வெளியான நிலையில், உண்மையான ஓட்டு எண்ணிக்கையில் தோற்றுப்போனதை காங்கிரஸ் தலைவர்களால் ஏற்க முடியவில்லை. இதையடுத்து தேர்தலில் மோசடி, ஓட்டு எண்ணிக்கையில் மோசடி, அறிவிப்பதில் மோசடி என்று பல விதமான புகார்களை கூறி வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான ஜெய்ராம் ரமேஷ், 'இ-மெயில்' மூலம் அனுப்பிய புகாரில், 'ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பாராத விதமாகவும், கள நிலவரத்துக்கு எதிராகவும் உள்ளன. மக்களின் மனங்களுக்கும் நேர்மாறாக உள்ளதால், இந்த தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்பது சாத்தியமில்லை என்று கூறியிருந்தார்.


இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில், ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக, விவாதிக்க வருமாறு காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில், 'நீங்கள் அளித்த புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளோம். 12 பேர் கொண்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு இன்று மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் காங்கிரஸ் தலைமை சார்பாக, நீங்கள், உங்கள் கட்சியின் பிரதிநிதிகள், விவாதிக்க வர வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement