விடுப்பு எடுத்த ஹோட்டல் ஊழியரை தாக்கிய உரிமையாளருக்கு வலை
அரும்பாக்கம்,
அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர், அதே பகுதியில் சைவ உணவகம் நடத்தி வருகிறார். இங்கு, திருச்சியைச் சேர்ந்த மணிராஜ், 49, என்பவர் பணிபுரிகிறார்.
இவரது மாமா ராஜேஷ் என்பவர், கடந்த 4ம் தேதி, செங்கல்பட்டில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்ற மணிராஜ், 7ம் தேதி பணிக்கு திரும்பினார்.
அப்போது, ஹோட்டல் உரிமையாளர் செந்தில், துக்க நிகழ்ச்சிக்கு சென்று வர இத்தனை நாளா என கேட்டு, ஊழியர்களுடன் சேர்ந்து மணிராஜை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த மணிராஜ் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மணிராஜ் புகாரை வழக்கு பதிந்த அரும்பாக்கம் போலீசார், தலைமறைவாக உள்ள உரிமையாளர் செந்தில், ஊழியர்களை தேடுகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில், சரவணா ஸ்டோர் உள்ளது. இங்கு, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஈயசன்னுல் ஹக், 24, என்பவர் பணிபுரிகிறார்.
கடந்த 8ம் தேதி இரவு, கடையின் எட்டாவது மாடியில் உள்ள பிரிவில் பணியில் இருந்தபோது, மொபைல் போனில் பேசி கொண்டிருந்தார்.
இதை பார்த்த, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மேலாளர் செல்வின்குமார், 44, என்பவர் பணி நேரத்தில் போன் பேசுவதை கண்டித்து, ஈயசன்னுல் ஹக் கன்னத்தில் அறைந்துள்ளார்.
தவிர, அவரது தலையை சுவற்றில் முட்ட வைத்துள்ளார்.
இதில், ஈசயன்னுல் ஹக் பின் தலையில் காயம் ஏற்பட்டது.
அங்கிருந்த வாடிக்கையாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பாண்டி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.