அக்.16ல் முத்தாலம்மன் கோயில் தேர் திருவிழா

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு அக். 16ல் தேர் திருவிழா நடக்கிறது.

வத்திராயிருப்பில் மழை தெய்வமாக விளங்கும் முத்தாலம்மன் திருக்கோயில் நகரின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி பொங்கல் திருவிழா அனைத்து சமுதாய மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் அக். 1-ல் வடக்கு வாசல் செல்வி அம்மன் மது பொங்கல் சாட்டுதல், அக். 8ல் முத்தாலம்மன் மது பொங்கல் சூட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முதல் அக் 15 வரை தினமும் மாலை 6:00 மணிக்கு முத்தாலம்மன் திடலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

முக்கிய நிகழ்வான தேர் திருவிழா அக்டோபர் 16 காலை நடக்கிறது. இதனை முன்னிட்டு முதல் நாள் இரவு 12:00 மணிக்கு மேல் அம்மன் திருத்தேர் எழுந்தருளல் நடக்கிறது.

ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜோதிலட்சுமி தலைமையில் அறநிலையத் துறையினர் செய்துள்ளனர்.

Advertisement