என்னைப் பற்றி நினைத்ததற்கு நன்றி; ரத்தன் டாடாவின் கடைசி பதிவு

15

மும்பை: மறைவதற்கு முன், தனது உடல்நிலை குறித்து, தொழிலதிபர் ரத்தன் டாடா வெளியிட்ட கடைசி பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பிரபல முன்னணி தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.


ரத்தன் டாடாவின் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


கடந்த இரு தினங்களுக்கு முன்பே ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து 7ம் தேதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.


அதாவது, "எனது உடல்நிலை குறித்து வதந்தியான செய்தி சமூகவலைதளங்களில் உலா வருவதை நான் அறிவேன். அது எதுவும் உண்மையில்லை. எனது வயது மூப்பு மற்றும் அதனால் ஏற்படும் தொந்தரவுகளுக்கான பரிசோதனைகள் மட்டுமே மேற்கொண்டு வருகிறேன். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எனது உடல்நிலை குறித்து போலி செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்", எனக் குறிப்பிட்டிருந்தார்.


அதோடு, என்னை பற்றி நினைத்ததற்கு மிகவும் நன்றி எனவும் பதிவிட்டிருந்தார். இதுவே ரத்தன் டாடாவின் கடைசி சமூக வலைதளப்பதிவாகும்.

Advertisement