தாலுகா மருத்துவமனைகளிலும் எம்.ஆர்.ஐ., வசதி எதிர்பார்ப்பு; l நோயாளிகளின் அலைச்சலை தவிர்க்க நடவடிக்கை

மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் தலைமை அரசு மருத்துவமனை, சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், வத்திராயிருப்பு, திருச்சுழி, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் தாலுகா அரசு மருத்துவமனைகள் உள்ளது.


தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை, சிகிச்சைக்கு அதிக செலவாவதால் அரசு மருத்துவனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் பரிசோதனை, பிரசவத்திற்காக அனுமதிக்கபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இங்கு எக்ஸ்ரே எடுக்க ரூ. 50, சி.டி., ஸ்கேன் எடுக்க ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் எம்.ஆர்.ஐ., பரிசோதனை எடுக்கும் வசதிகள் இல்லை. இதனால் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு வந்து காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து நோயாளிகள் இலவசமாக எடுக்கின்றனர்.

இதில் பதிவு செய்து அப்ரூவல் கிடைத்தால் மட்டுமே காப்பீட்டு திட்டத்தில் எடுக்க முடியும். மேலும் ரூ. 2500 கட்டணம் செலுத்தினால் எம்.ஆர்.ஐ., பரிசோதனை உடனடியாக எடுத்துக்கொள்ளலாம்.

மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் எம்.ஆர்.ஐ., பரிசோதனைக்கு என நோயாளிகள் தினமும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வந்து காத்திருந்து எடுத்துச் செல்கின்றனர். தங்கள் பகுதிகளில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ., வசதி ஏற்படுத்தினால் நோயாளிகளின் அலைச்சல் குறைந்து எளிதாக சிகிச்சை பெற்றுச் செல்ல முடியும்.

ஆனால் தாலுகா அரசு மருத்துவனைகளில் எம்.ஆர்.ஐ., பரிசோதனை செய்யும் வசதிகளை ஏற்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் பரிசோதனைக்காக விருதுநகர் நோக்கி வரும் மக்களின் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் தாலுகா அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ., பரிசோதனை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து, நோயாளிகளின் அலைச்சலை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement