அனுமந்தபுரம் சாலை நடுவே மரண பள்ளங்களால் அச்சம்

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை 9 கி.மீ., நீளம் உடையது. இச்சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது.

தென்மேல்பாக்கம், அஞ்சூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம வாசிகள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக, இச்சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.

இந்த சாலையில் தென்மேல்பாக்கம், அஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை நடுவே பள்ளங்கள் அதிகளவில் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, வாகனங்கள் இரவு நேரங்களில் தடுமாறி வருகின்றன.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இந்த சாலை வழியாக இரண்டு மாதங்களுக்கு முன் மருதேரி ஏரியில் மண் எடுத்த போது, இவ்வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வந்தன.

இதன் காரணமாக, சாலையின் பல இடங்களில் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றன.

எனவே, இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement