பரமக்குடி ஜீவாநகர் ஊருணி சீரமைப்பு

தினமலர் செய்தி எதிரொலி

பரமக்குடி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவா நகர் ஊருணி சீரமைக்கப்படுகிறது.

பரமக்குடி நகராட்சியில் 10 வார்டுகள் வைகை ஆற்றின் மறு கரையான எமனேஸ்வரம் பகுதியில் உள்ளது. இங்கு 10-வது வார்டில் ஜீவா நகர் முருகன் கோயில் மடத்து ஊருணி உள்ளது. பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று சீமைக்கருவேல மரங்கள் முளைத்தும் தண்ணீர் இன்றி காய்ந்து கிடந்தது.

இது குறித்து பலமுறை தினமலர் நாளிதழில் அப்பகுதி மக்களின் கோரிக்கையுடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊருணி சீரமைப்பு பணியை நகராட்சி சார்பில் மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஊருணி துார்வாரபட்ட நிலையில் ஊருணியை சுற்றி பேவர் கல்தளத்துடன் நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊருணியை பாதுகாக்கும் வகையில் கம்பி வேலி அமைக்கப்பட உள்ளது. இதனை சுற்றி செடிகள் வளர்க்கப்பட்டு, மின் விளக்குகள் அமைத்து பாதுகாக்கப்பட உள்ளது.

இதேபோல் ஊருணியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் வகையில் பாறை கற்களால் மண்சரிவு ஏற்படாமல் தடுப்புகள் கட்டப்பட உள்ளன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊருணி சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பாக அமையும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement