வாதானுாரில் தீ விபத்து 2 வீடுகள் எரிந்து சேதம்

திருக்கனுார் : வாதானுார் இருளர் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

திருக்கனுார் அடுத்த வாதானுார் இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து, 43; கூலி தொழிலாளி. இவரது குடிசை வீடு நேற்று அதிகாலை 3:00 மணியளவில் மின்கசிவு காரணமாக திடீரென தீ பிடித்து எரிந்தது. இதைகண்ட குடும்பத்தினர் அலறியபடி, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

தகவலறிந்த திருக்கனுார் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் அருகிலிருந்த மீனா என்பவரது குடிசை வீடும் தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

இதில், நாகமுத்து மற்றும் மீனா ஆகியோரின் குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து, அங்கிருந்த மின்சாதன மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. தீ விபத்து குறித்து திருபுவனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement