'‛ஈட் ரைட் ஸ்கூல்' திட்டத்தில் சான்றிதழ் பெற்ற அரசுப் பள்ளிகள்

மதுரை: உணவுப்பாதுகாப்புத்துறையின் 'ஈட் ரைட் ஸ்கூல்' திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் நான்கு அரசுப் பள்ளிகளுக்கு சிறப்பு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதாக மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மத்திய அரசின் உணவுப்பாதுகாப்புத்துறையின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான சத்தான உணவு, ஆரோக்கியமான வாழ்வு குறித்து ஓராண்டு வரை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். ஒவ்வொரு பள்ளியிலும் 20 முதல் 40 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மாதந்தோறும் வினாடிவினா, ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தி பரிசு வழங்குகிறோம்.

மாணவர்கள் விழிப்புணர்வு பெற்றதன் அறிகுறியாக ஓராண்டு முடிவில் 'ஈட் ரைட் ஸ்கூல்' எனப்படும் நற்சான்றிதழ் அப்பள்ளிக்கு வழங்கப்படும்.இந்தாண்டு முதன்மை கல்வி அலுவலர் மூலம் 21 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்தோம். அதில் திருப்பரங்குன்றம் ஒன்றியம் வெள்ளைபாறைபட்டி, நல்லுார், பரம்புபட்டி, பனையூர் ஊராட்சி யூனியன் நடுநிலைப் பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளோம். இன்னும் 17 பள்ளிகளில் பயிற்சி நடக்கிறது. அரசுப் பள்ளிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கிறோம். தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் உண்டு என்றார்.

Advertisement