அக்.,17ல் மீண்டும் ஹரியானா முதல்வராக பதவியேற்கும் சைனி; 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

சண்டிகர்: ஹரியானாவின் முதல்வராக நயாப் சிங் சைனி 2வது முறையாக வரும் 17ம் தேதி பதவியேற்க உள்ளார்.


ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் மெஜாரிட்டி பெற 46 இடங்கள் தேவை என்ற நிலையில், 48 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ., மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. கருத்துக் கணிப்புகளில் பா.ஜ.,வுக்கு 30 இடங்கள் கூட வராது என்றும், காங்கிரஸே ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதனை எல்லாம் பொய்யாக்கி பா.ஜ., வெற்றி பெற்றது. ஆட்சியமைக்கும் கனவில் இருந்த காங்கிரஸூக்கு 37 தொகுதிகளே கிடைத்தன.


இந்த நிலையில், வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு புதிய அரசு பதவியேற்கிறது. இந்த விழாவில், 2வது முறையாக நயாப் சிங் சைனி முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


முதல்வராக இருந்த மனோஹர் லால் கட்டார், லோக் சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகினார். இதனால், நயாப் சிங் சைனி முதல்வராக நியமிக்கப்பட்டார்.


பல்வேறு விமர்சனங்கள் நயாப் சிங் சைனியின் அரசு மீது எழுந்த போதும், அதனை சுக்குநூறாக்கி, மீண்டும் பா.ஜ., ஆட்சியை பிடிக்க வைத்துள்ளார். இதன் காரணமாக, பா.ஜ.,வின் நம்பத் தகுந்த தலைவராக நயாப் சிங் சைனி உருவெடுத்துள்ளார்.


சைனி தலைமையில் புதிதாக உருவாக்கப்படும் அமைச்சரவையில் மொத்தமுள்ள 13 பதவிகளில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. கடந்த முறை சைனி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மஹிபால் தாண்டா, மூல் சந்த் சர்மா ஆகிய இருவர் மட்டுமே வெற்றியை தக்க வைத்துள்ளனர்.


ஹரியானாவில் பா.ஜ., வெற்றியை காங்கிரஸால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தேர்தல் ஆணையத்திடமும் அந்த கட்சி புகாரை அளித்தது. இது ஒரு புறம் இருக்க கூட்டணி கட்சிகளே காங்கிரசை விமர்சித்து வந்தன.


கடந்த முறை அமைச்சரவையில் அனைத்து சமூகத்தினருக்கும் சமமான பங்களிப்பு கொடுத்ததே, பா.ஜ.,வின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement