ஜாம் நகர் அரச குடும்பத்தின் வாரிசாக அஜய் ஜடேஜா அறிவிப்பு!

ஜாம்நகர்: பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜய் ஜடேஜா, குஜராத் ஜாம் நகர் அரச குடும்பத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

நவா நகர் (இந்நகர் தற்போது ஜாம் நகர் என்றும் அழைக்கப்படுகிறது) அரச குடும்பத்தின் சாம்சாஹேப் சத்ருசல்யா சிங்ஜி திக்விஜய்சிங்ஜி ஜடேஜா வெளியிட்ட அறிக்கை:

தசரா பண்டிகையானது பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்து வெற்றி பெற்ற நாளைக் குறிக்கும் என நம்பப்படுகிறது. தசரா நாளான இன்று, அஜய் ஜடேஜா என்னுடைய வாரிசாக இருப்பதற்கு ஏற்றுக் கொண்டு, எனக்கிருந்த இக்கட்டான பிரச்னைக்கு ஒரு தீர்வு வழங்கி உள்ளார். இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஜாம் நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை அஜய் ஜடேஜா ஏற்றுக் கொண்டது ஜாம் நகர் மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சத்ருசல்யாசிங்ஜி திக்விஜய்சின்ஹ்ஜி ஜடேஜா கூறியுள்ளார்.


சத்ருசல்யாசிங்ஜி திக்விஜய்சிங்ஜி ஜடேஜா சகோதரர் ( உடன் பிறந்தவர் அல்ல) தவுலத் சிங் ஜடேஜா. இவரின் மகன் தான் அஜய் ஜடேஜா. தவுலத் சிங் ஜடேஜா 3 முறை ஜாம் நகர் எம்.பி., ஆக பதவி வகித்து உள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரரான அஜய் ஜடேஜா, 1992ம் ஆண்டில் இருந்து 2000ம் ஆண்டு வரை இந்தியாவுக்காக 196 ஒருநாள் மற்றும் 15 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். முன்னணி கிரிக்கெட் வீரரான இவர், இந்திய அணியின் பல வெற்றிகளில் பங்களித்தவர்.
ஓய்வு பெற்ற பிறகு, பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர், கிரிக்கெட் வர்ணணையாளர் ஆகவும் பணியாற்றி உள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார்.

Advertisement