உ.பி.,யில் மகளை கொல்ல ரவுடியை ஏவிய தாய்; பிறகு நடந்த 'டுவிஸ்ட்'

9

லக்னோ: உ.பி.,யில் 17 வயது மகளை கொல்வதற்கு, ரவுடி ஒருவரை தாயார் ஏவினார். ஆனால், ரவுடி தான் அந்த காதலன் என்பது பிறகு தான் தாயாருக்கு தெரியவந்தது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், காதலனுடன் சேர்ந்து தாயாரை கொலை செய்த நிகழ்வு அரங்கேறி உள்ளது.


உ.பி., மாநிலம் எடா மாவட்டத்தில் வசித்து வந்த ராம்காந்த் என்பவர், மனைவி ஆல்காவை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ஆல்காவை இறந்த நிலையில் கண்டுபிடித்தனர். கொலையாளி யார் என விசாரணை நடத்தினர். அதில், 17 வயதான அவரது மகள், காதலன் சுபாஷ் என்ற ரவுடியுடன் சேர்ந்து தாயாரை கொலை செய்தார் என்பது தெரியவந்தது.மகளிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.


இது குறித்து போலீசார் கூறியதாவது: 17 வயதான மகள், சுபாஷ் என்பவரை யாருக்கும் தெரியாமல் காதலித்து வந்துள்ளார். ஆனால், மகள் மீது தாயாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், உறவினர் வீட்டிற்கு மகளை ஆல்கா அனுப்பி வைத்தார். அங்கு சென்ற பிறகு சிறுமி, மொபைல் மூலம் காதலை வளர்த்துள்ளார். இதனையறிந்த உறவினர், சிறுமியை தாயாரிடம் திருப்பி அனுப்பிவிட்டார். எவ்வளவு கண்டித்தும் மகள் திருந்துவதாக தெரியவில்லை. இதனால் வெறுத்து போன ஆல்கா மகளை கொலை செய்ய திட்டமிட்டார்.


இதற்கிடையில், சுபாஷ் பலாத்கார வழக்கில் சிக்கி சிறை சென்றுவிட்டு விடுதலை ஆகி உள்ளார். இவர் தான், தனது மகளின் காதலன் என தெரியாமல், அவரை அணுகிய ஆல்கா மகளை கொலை செய்வதற்கு ரூ.50 ஆயிரம் முன்பணமாக கொடுத்துள்ளார். கொலைக்கு பிறகு கூடுதல் பணம் தருவதாக வாக்கு கொடுத்துள்ளார். அப்போது எதையும் வெளிக்காட்டாமல் கேட்ட சுபாஷ், சிறுமியிடம் தாயாரின் திட்டம் குறித்து கூறியுள்ளார். அப்போது சிறுமி, ரவுடியை திருமணம் செய்ய தயாராக உள்ளதாகவும், இடையூறாக உள்ள தாயாரை கொலை செய்துவிடும்படி கூறியுள்ளார். இதனை அவரும் ஏற்றுக்கொண்டார். தாயாரை தனியாக வரவழைக்க திட்டமிட்ட இருவரும் சதி திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். அதில் சிறுமி கொலை செய்யப்பட்டது போல் புகைப்படம் எடுத்து ஆல்காவிற்கு சுபாஷ் அனுப்பி வைத்து கூடுதல் பணத்தை கேட்டுள்ளான்.


இதற்காக இருவரும் ஆக்ராவில் சந்தித்துள்ளனர். அங்கு தான் ஆல்காவிற்கு, தான் ஏவிய சுபாஷ் தான் மகளின் காதலன் என தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுபாஷம், சிறுமியும் ஆல்காவை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்து வயல்வெளியில் வீசிவிட்டு தப்பினர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement