ஜெகதீசன் சதம்: தமிழகம் அபாரம்

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழகத்தின் ஜெகதீசன் சதம் விளாசினார்.
கோவையில் நடக்கும் ரஞ்சி கோப்பை 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் விளையாடுகின்றன. சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன் எடுத்தது.


இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமிழக அணிக்கு சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 172 ரன் சேர்த்த போது சாய் சுதர்சன் (82) 'ரன்-அவுட்' ஆனார். ஜெகதீசன் (100), சதம் விளாசினார். பாபா இந்திரஜித் (40) ஓரளவு கைகொடுத்தார்.

ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 278 ரன் எடுத்திருந்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் (45) அவுட்டாகாமல் இருந்தார். சவுராஷ்டிரா சார்பில் ஜெயதேவ் உனத்கட் 2 விக்கெட் வீழ்த்தினார்.
மும்பை தடுமாற்றம்

வதோதராவில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பரோடா, மும்பை அணிகள் விளையாடுகின்றன. பரோடா அணி முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. மும்பை அணிக்கு ஆயுஷ் மத்ரே (52), ஹர்திக் தாமோர் (42) நம்பிக்கை அளித்தனர். கேப்டன் ரகானே (29), ஸ்ரேயாஸ் (0) சோபிக்கவில்லை. மும்பை அணி முதல் இன்னிங்சில் 214 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.

பரோடா சார்பில் பார்கவ் பாட் 4, ஆகாஷ் சிங் 3 விக்கெட் சாய்த்தனர். ஆட்டநேர முடிவில் பரோடா அணி 2வது இன்னிங்சில் 9/0 ரன் எடுத்து 85 ரன் முன்னிலையில் இருந்தது.

Advertisement