ஹிந்துக்களை சமாதானபடுத்த வங்கதேச அரசு முயற்சி

13

டாக்கா: டாக்கா: வங்கதேசத்தில் துர்கா பூஜை பந்தல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், ஹிந்துக்களை சமாதானபடுத்தும் வகையில், அந்நாட்டின் மிகப்பழமையான தாகேஸ்வரி கோவிலுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஷ் நேரில் சென்றார்.


மேற்கு வங்கத்தைப் போலவே, நம் அண்டை நாடான வங்கதேசத்திலும் துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 32,000க்கும் மேற்பட்ட பந்தல்கள் அமைக்கப்பட்டன. இந்த கொண்டாட்டங்களின் போது, 35க்கும் மேற்பட்ட அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி உள்ளன; 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 பேர் கைதாகி உள்ளனர். டாக்கா அருகே உள்ள சத்தோகிராம் என்ற இடத்தில் அமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தலில் நுழைந்த ஏழு பேர், இஸ்லாமிய பாடல்களை பாடினர். இதனால், அங்கு திரண்டிருந்த ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் தொடர்பாக ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, டாக்காவில் உள்ள டாட்டி பஜார் என்ற இடத்தில், துர்கா பூஜை பந்தல் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், ஒருவர் காயம் அடைந்தார். இதுகுறித்து நம் வெளியுறவுத் துறை கண்டன அறிக்கை வெளியிட்டது. ஹிந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதையும், அவர்கள் தங்கள் பண்டிகைகளை அச்சமின்றி கொண்டாடுவதையும் வங்கதேச அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் , வங்கதேச ஹிந்துக்களை சமாதனப்படுத்தும் வகையில், மிகப் பழமையான தாகேஸ்வரி கோவிலுக்கு முகமது யூனுஸ் சென்றார்.
பிறகு அவர் கூறுகையில், அனைத்து குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையிலான வங்கதேசத்தை கட்டமைக்க அரசு விருமபுகிறது. 'நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் உரிமையும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். துர்கா பூஜையின் போது, மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து பாதுகாப்பு படையினர் கடுமையாக உழைத்தனர். இந்த விவகாரத்தில் கூட்டுத் தோல்வி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இரண்டாவது முறை



வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தின் போது, ஏற்பட்ட கலவரத்தின் போதும் ஹிந்துக்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்து இருந்தார். அப்போது முகமது யூனுஸ், தாகேஸ்வரி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது, கோயில் நிர்வாகிகளிடம் நீதி மற்றும் சம உரிமை வழங்கப்படும் என அவர் உறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement