மோசமான பேரழிவு ஏற்படும்: தென் கொரியாவை மிரட்டும் வட கொரியா

1


பியாங்யாங்: தொடர்ந்து ட்ரோன்களை எங்கள் நாட்டிற்குள் அனுப்பி வந்தால், தென் கொரியா மோசமான பேரழிவை சந்திக்க நேரிடும் என வட கொரியா எச்சரித்து உள்ளது.


வட கொரியா - தென் கொரியா இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தங்கள் நாட்டிற்குள் ட்ரோன்கள் மற்றும் பலூன்களை தென் கொரியா அனுப்பி வருவதாக வட கொரியா குற்றம்சாட்டி வருகிறது. பலூன்களில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு எதிரான பிரசாரங்கள், தென் கொரியா நாடகங்கள் மற்றும் பாப் பாடல்கள் அடங்கிய சாதனங்கள் இருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.


தென் கொரிய கலாசாரம், பரவுவதை தடுக்க பலூன்களை அழிக்கும் பணியிலும் அந்நாடு ஈடுபட்டு உள்ளது. இதன் காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகளுக்கு இடையில் உறவு பாதிக்கப்பட்டு உள்ளது. வட கொரியா மீது தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டேன் என அந்நாட்டை ஆட்சி செய்யும் கிம் ஜான் உங் எச்சரித்து இருந்தார். இதன் பிறகு 2022 ல் வட கொரியா, தென் கொரியாவிற்குள் ட்ரோன்களை அனுப்ப துவங்கியது. இதனை அழிப்பதற்காக போர் விமானங்களை தென் கொரியா தயாராக வைத்து இருந்தாலும், இதுவரை எந்த ட்ரோனையும் அழிக்கவில்லை.


இந்நிலையில், தென் கொரியா மீண்டும், வட கொரியாவுக்கு எதிரான பிரசாரங்கள் அடஙகிய சாதனங்களுடன் ட்ரோன்களை அனுப்பி வருவதாக கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் குற்றம்சாட்டி உள்ளார். இதனை தென் கொரியா பாதுகாப்பு அமைச்சரும், ராணுவ தளபதியும் மறுத்துள்ளனர்.


இதனையடுத்து கிம் யோ ஜோங் கூறியதாவது; வட கொரியாவுக்கு எதிரான தகவல்களை கொண்ட ட்ரோன்கள் தொடர்பான குற்றச்சாட்டை உறுதி செய்ய தென் கொரியா மறுக்கிறது. இதனை பார்த்தால், ராணுவ கேங்ஸ்டர்கள் தான் இதனை செய்கின்றனர் என தெரிகிறது. இத்தகைய ட்ரோன்கள் மீண்டும் பியாங்யாங் வானில் தென்படுவதை பார்த்தால், அது மோசமான பேரழிவுக்கு தான் வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement