உடற்பயிற்சி கூடம் சூறை 3 வாலிபர்களுக்கு 'காப்பு'

கொடுங்கையூர், சென்னை கொடுங்கையூர் வாசுகி நகரில், மாநகராட்சி உடற்பயிற்சி கூடம் உள்ளது. இதன் பராமரிப்பாளர் நரேஷ்குமார், 30; கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

உடற்பயிற்சிக் கூடத்தில் உதவியாளராக ராஜா என்பவர் பணிபுரிகிறார். உடற்பயிற்சி கூடத்திற்கு நேற்று வந்த நான்கு பேர், அங்கு புதிதாக பெயின்ட் அடித்த மேஜையில் அமர்ந்துள்ளனர். இதுகுறித்து ராஜா கேட்டபோது, அவரை தாக்கியதோடு, உடற்பயிற்சி கூடத்தில் இருந்த ஐந்து கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிந்த கொடுங்கையூர் போலீசார், கொடுங்கையூரை சேர்ந்த நரேஷ்குமார், 30, ராஜ்குமார், 29, முரளி, 30 ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான மதன் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement