போதை நபர் ஓட்டிய கார் மோதி பெண் போலீசுக்கு எலும்பு முறிவு

கோயம்பேடு, மது போதையில், கார் ேஷாரூம் மேலாளர் ஓட்டி வந்த கார் மோதி, போக்குவரத்து பெண் போலீஸ் காயமடைந்தார்.

வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி, 23. இவர், கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை, கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, 100 அடி சாலை கேம்ஸ் வில்லேஜ் குடியிருப்பு சிக்னல் அருகே நின்றார்.

அப்போது, வேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார் ஒன்று, போக்குவரத்து போலீஸ் பூத் மீது மோதி, லோகேஸ்வரி மீதும் மோதியது. இதில் லோகேஸ்வரிக்கு, வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விசாரித்தனர்.

இதில், விபத்து ஏற்படுத்தியது, மாருதி கார் ேஷாரூமில் மேலாளராக பணிபுரியும், அடையாறு ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார், 29, என தெரிந்தது. மது போதையில் இருந்த நந்தகுமாரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement