பன்றிகள், மான்களால் பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்குவதில் முறைகேடு விவசாயிகள் புகார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மான், காட்டுபன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கணக்கெடுக்கும் வனத்துறை அதிகாரிகள் முறையாக நிவாரணம் வழங்காமல் முறைகேடு செய்கின்றனர் என ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இம்மாவட்டத்தில் கமுதி, பரமக்குடி, தெளிச்சாத்தநல்லுார், சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, தொண்டி, மண்டபம், உச்சிபுளி ஆகிய இடங்களில் அடர்ந்த சீமைக்கருவேல காட்டுப்பகுதிகள் உள்ளன. இவற்றில் ஏராளமான புள்ளி மான்கள், காட்டுப்பன்றிகள் வசிக்கின்றன.

இவை இரவில் அருகில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், மிளகாய், பருத்தி, நிலக்கடலை பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இதற்காக இழப்பீட்டு தொகை வழங்க விண்ணப்பித்தால் வனத்துறை அதிகாரிகள் உரிய நிவாரணம் வழங்குவதில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். பரமக்குடி அருகே இலந்தைகுளம் விவசாயி என்.எஸ்.பாஸ்கரபத்மநாபன் கூறியதாவது: மூன்று ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளேன். இரவு கூட்டமாக புள்ளி மான்கள் வயலில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. ரூ. 80ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாய், வேளாண் துறை சான்றுடன் வனத்துறையில் இழப்பீடு கோரி விண்ணப்பித்தால் ரூ.10ஆயிரம் மட்டும் வழங்குகின்றனர். அதையும் திருப்பி கொடுத்து விட்டேன். வனவிலங்கு சேதத்திற்குரிய முழு தொகையை வனத்துறை அதிகாரிகள் வழங்குவது இல்லை. மேலும் சேதவிவரம் கணக்கெடுப்பில் முறைகேடு நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கூறியதாவது: வன விலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டால் வருவாய், வேளாண்துறை சான்றுகள் தேவையில்லை. நாங்களே நேரில் களஆய்வு செய்து சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்குகிறோம். கணக்கெடுப்பில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்றார்.

Advertisement