வி.சி., கொடி கம்பம் மாயம்: புவனகிரியில் மறியல் 

புவனகிரி: புவனகிரி அருகே வி.சி., கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் கல்வெட்டில் இருந்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புவனகிரி அருகே மஞ்சக்கொல்லையில் வி.சி., கட்சியினர்., கல்வெட்டுடன் கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றி இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, கம்பத்தில் இருந்த கட்சிக் கொடியை மர்ம நபர்கள் அகற்றினர்.

இது குறித்து அக்கட்சி சார்பில் மருதுார் போலீசில் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுக்காதால், வி.சி., கட்சியினர் போராட்டத்திற்கு ஆயத்தமாகினர். அதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று காலை கொடிக்கம்பம் காணாமல் போனதால் அப்பகுதியினர் திரண்டு சேத்தியாத்தோப்பு - புவனகிரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மருதுார் சப் இன்ஸ்பெக்டர் லெனின் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

திடீர் சாலை மறியலால் இந்த சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement