4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இதுதான் நடக்கும்! வானிலை மையம் கணிப்பு

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை நிலவரம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந் நிலையில் நாளை முதல் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து இருந்தது.

மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாது கொட்டியது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், சைதாப்பேட்டை, கிண்டி என பல பகுதிகளில் மழை பெய்துள்ளது.

மழை தொடர்வதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புகள் உள்ளன.


மழைநீர் தேங்கும் போது, சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும். ஆங்காங்கே பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement