கனமழை எதிரொலி; பள்ளி விடுமுறை பற்றி இன்று மாலை அறிவிப்பு

7

சென்னை: சென்னையில் 300 நிவாரண முகாம்கள் மற்றும் 130 படகுகள் தயாராக உள்ளன; பள்ளி விடுமுறை பற்றி இன்று மாலை முதல்வர் அறிவிப்பார் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.


சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் 300 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தண்ணீர் தேங்கியுள்ளதால் இரண்டு சுரங்க பாதைகள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தம் 8 இடங்களில் மரம் முறிந்து விழுந்து உள்ளது. அவற்றை அகற்றும் பனி தீவிரமாக நடந்து வருகிறது.


மின்சாரத்தை தடை இல்லாமல் வழங்கி வருகிறோம். சென்னையில் 89 படகு உட்பட பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு மணி நேரம் மழை நின்றால், கணேசபுரம், பெரம்பூர் சுரங்க பாதையில் தேங்கி மழை நீர் வெளியேற்றப்படும். சென்னைக்கு உதவ தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


பள்ளி விடுமுறை தொடர்பாக இன்று மாலைக்குள் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார். மழை எச்சரிக்கை தொடர்பாக ஆய்வு செய்த பின் விடுமுறை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார். திருவள்ளூரில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு உதயநிதி கூறினார்.

Advertisement