வரிவசூலில் அலுவலர்கள் கிடப்பில் மக்கள் பணிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக்கு மக்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கியை வசூலிக்க வருவாய் துறை அலுவலர்கள் மட்டுமின்றி பிற பிரிவு அலுவலர்களும் ஈடுபட்டதால் மக்கள் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு ரூ.53 கோடி வரி பாக்கி உள்ளது. இதை வசூலிக்க அனைத்து அலுவலர்களுக்கும் கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

முறையாக பணியாற்றாத 15 அலுவலர்களுக்கு'மெமோ'வும் வழங்கினார். வருவாய் பிரிவு அலுவலர்கள் மட்டும் பார்த்து கொண்டிருந்த வரி வசூல் பணியில் சுகாதாரம், கட்டட பராமரிப்பு, கணக்கு பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பல்வேறு சேவைக்காக மாநகராட்சிக்கு வரும் மக்கள் அதற்குரிய அலுவலர்கள் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

இம்மாதம் முழுவதும் இதேநிலை இருப்பதால் பலவிதமான பணிகள் கிடப்பில் உள்ளது. வரி வசூலிக்கும் பணிகளில் சம்பந்தபட்ட துறை அலுவலர்களை மட்டும் பயன்படுத்துவதோடு மக்கள் பணிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement