திருச்சி அருகே ஆம்னி பஸ் தீ பிடித்தது!


சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி செயிண்ட் பால் என்ற தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இதில் இரண்டு டிரைவர்கள் மற்றும் 39 பயணிகள் என மொத்தம் 41 பேர் பயணம் செய்துள்ளனர். பஸ்சை ராஜா என்பவர் ஓட்டிச் சென்ற நிலையில் நள்ளிரவு சுமார் 1.15 மணியளவில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கட்டையை தாண்டி அங்கிருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

பஸ் கவிழ்ந்த வேகத்தில் திடீரென தீப்பற்ற தொடங்கிய நிலையில் இருந்த டிரைவர்கள் மற்றும் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியேறி உள்ளனர். அக்கம் பக்கத்தில் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்களும் சத்தம் கேட்டு ஓடி வந்து பஸ்சில் இருந்த பயணிகளை உடனடியாக மீட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில் பஸ்சில் பற்றிய மளமளவென என கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக அனைத்தனர். இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. இச்சம்பவத்தில் டிரைவர்கள் ராஜா, பாபு மற்றும் பயணிகள் என மொத்தம் 15 பேர் காயம் அடைந்தனர்.

அனைவரும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தால் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்சின் முன் பக்க டயர் வெடித்ததாலேயே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து தீ பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement